எதிர்வரும் 6ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டிட்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இம்மாநாடு தொடர்பில் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையே முதல் படியாக இருக்கும் என்று ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் நீக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, குறித்த மாநாட்டை பொதுவான ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.


