அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள புதிய தரவுகள், எல்லைப்பகுதிகளில், மின்னணு சாதனங்கள் மீதான சோதனைகள் சடுதியாக அதிகரித்துள்ளதைக் காண்பித்துள்ளன.
இதனால் அமெரிக்காவுக்குச் செல்லும் கனேடியர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றதாக கூறப்படுகின்றது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும், அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை, கனேடிய – அமெரிக்க எல்லைகளில் 14,899 மின்னணு சாதனங்களைச் சோதித்துள்ளது.
இந்தச் சோதனைகளில் பெரும்பாலானவை அடிப்படை சோதனைகள் என்ற போதும், 1,075 சோதனைகள் ‘மேம்பட்ட’ சோதனைகளாக நடத்தப்பட்டுள்ளன.
இந்த மேம்பட்ட சோதனைகளில், அமெரிக்க அதிகாரிகள் சாதனத்தின் உள்ளடக்கங்களை முழுமையாகப் படி எடுக்கவும், பகுப்பாய்வு செய்யவும் முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
