வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 4 வழக்குகள் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்தவுடன், வர்த்தமானி வெளியிடப்படும் என்றும், பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
வேலையற்ற பட்டதாரிகள் கூட்டு சங்கத்தின் பிரதிநிதிகளிடையே கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டபடி, தற்போது தேவைப்படும் பிற பட்டதாரி ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆசிரியர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை திருத்துவதற்கும், வயது வரம்பை நீடிப்பதற்கும், தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
