விமானசேவை ரத்து செய்யப்பட்டமையால், பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு 1,000 டொலர் இழப்பீட்டை வெஸ்ட்ஜெட் விமான நிறுவனம் வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஓவன் லாரோ என்ற பயணி, ரீஜினா நகரிலிருந்து ஒட்டாவாவுக்குச் செல்லவிருந்த நிலையில், அவர் பயணிக்கவிருந்த வெஸ்ட்ஜெட் விமானசேவை ரத்து செய்யப்பட்டது.
அதனால், அவரது பயணமானது 21 மணித்தியாலங்கள் தாமதமானது.
இது தொடர்பாக அவர் கனடிய போக்குவரத்து முகவரகத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த விமானத்தினை அன்றைய தினம் செலுத்த வேண்டிய விமானி உடல்நலக்குறைவு காரணமாக திடீரென பணிக்கு வரவில்லை என்றும், மாற்று விமானி கிடைக்காததால் அன்றைய விமானசேவை ரத்து செய்யப்பட்டதாகவும் வெஸ்ட்ஜெட் நிறுவனம் வாதிட்டது.
இது ஒரு “பாதுகாப்பு நலன்” தொடர்பான பிரச்சினை என்பதால், பயணிக்கு இழப்பீட்டினை வழங்கத் தேவையில்லை என்றும் வெஸ்ட்ஜெட் நிறுவனம் கூறியது.
வெஸ்ட்ஜெட் நிறுவனம் முன்வைத்த இந்த வாதத்தினை, கனடிய போக்குவரத்து முகவரகம் ஏற்க மறுத்தது.
வெஸ்ட்ஜெட் விமான நிறுவனம், விமானச்சேவையில் ஏற்படக்கூடிய பணியாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, முறையான மாற்றுத் திட்டத்தைக் கொண்டிருந்ததா என்பதை நிரூபிக்கவில்லை என்றும் அது தொடர்பில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், கனடிய போக்குவரத்து முகவரகம் தெரிவித்தது.
இதனால், வெஸ்ட்ஜெட் விமான நிறுவனம் பாதிப்புக்குள்ளான பயணியான ஓவன் லாரோவுக்கு 1,000 டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என கனடிய போக்குவரத்து முகவரகம் உத்தரவிட்டது.
வெஸ்ட்ஜெட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வானது, இந்த வழக்கை விசாரித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் கனடிய போக்குவரத்து முகவரகம் மேற்கொண்ட முடிவில் தவறு எதுவும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளதுடன், வெஸ்ட்ஜெட் நிறுவனம் தொடர்ந்த வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளது.
