கொழும்பு மற்றும் கண்டியிலிருந்து நானுஓயா வழியாக பதுளை செல்லும் ரயில்களில் சுற்றுலாப்பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டுஇலக்கத்தை உள்ளீடு செய்யாது ஆசன முன்பதிவு செய்தமையால் சுற்றுலா பயணிகளை ரயிலில் பயணிப்பதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ச்சியாக புறக்கணிப்படுவதாக சமூக வலைதளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது .
இதில் நானுஓயா தொடருந்து நிலையத்தில் எல்ல நோக்கி பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மதியம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வெற்று ஆசனங்களுடன் ரயில் செல்வதாகவும் இதனால் புகையிரத நிலைய பிரதான அதிபர் உட்பட புகையிரத நிலைய அதிகாரிகளுடன் சுற்றுலா வழிகாட்டிகளும் சுற்றுலா பயணிகளும் முரண்பட்ட பின்னர் அங்கு அமைதியின்மையும் ஏற்படுவதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
ரயில் பயணச்சீட்டுக்களை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடிநடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவித்து தொடருந்து ஆசனங்களை முன்பதிவுசெய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டுகடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அன்று முதல் இன்று வரை ரயில் நிலையங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர் .
இவ்வாறு நிலவும் சர்ச்சைகளினால் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என சுற்றுலா வழிகாட்டிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் இலங்கை தவிர்ந்த வேறு சுற்றுலா நாடுகள் நோக்கிப் பயணிக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.
