கடந்த யுத்த காலத்தில் “பாதுகாப்பு வலயம்” என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை ஒப்பிட்டு, மக்கள் இத்திட்டத்தால் பாரிய பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சுவதாகவும், இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மக்களும், பொது அமைப்புகளும் காற்றாலை மின்உற்பத்திக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால், இத்திட்டம் மன்னார்த் தீவில் அமைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளே அவர்களின் எதிர்ப்புக்கு காரணம் என்கிறார். மக்களின் எதிர்ப்பையும் மீறி, காற்றாலைக் கோபுரங்களின் பாகங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார்த் தீவிற்கு எடுத்துச் செல்லப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மக்கள் விரும்பாத ஒரு திட்டத்தை அத்துமீறி திணிக்க முடியாது எனவும், அரசு மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டுமே தவிர, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். இதனால், மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
