கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம், ”ஓகஸ்ட் 1 ஆம் திகதி” எனும் காலக்கெடுவுக்குள் நிறைவடைவது சாத்தியமில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அந்த காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது, பிரதமர் மார்க் கார்னியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், டிரம்ப் நிர்வாகம் செம்பிலான உற்பத்திப் பொருட்களின் மீது புதிய வரிகளை விதித்துள்ளது,
இந்த வரிவிதிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தமொன்றுக்காக தமது தரப்பினர் கடுமையாக உழைத்து வருவதாகவும், சிறந்த ஒப்பந்தத்தை எட்டுவதே தமது நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கனடாவின் முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்களான அமெரிக்காவிற்கான கனடாவின் தூதர் கிறிஸ்டன் ஹில்மன் மற்றும் கனடா-அமெரிக்கா வர்த்தகப் பொறுப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் ஆகியோரும் ஓகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓகஸ்ட் 1 ஆம் திகதியை கனடாவின் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளதுடன் இந்த காலக்கெடுவை பூர்த்தி செய்யாத கனேடிய உற்பத்திப் பொருட்களுக்கு 35% வரி விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

