வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம், ஒரு சிறிய பயணிகள் விமானம் ‘கடத்தப்பட்டதாக’ கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து, விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சில விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.
கனேடிய காவல்துறை அதிகாரிகள், நேற்று மதியம் 1:10 மணி பசிபிக் நேரப்படி, வான்கூவர் தீவில் இருந்து ‘கடத்தப்பட்ட’ ஒரு செஸ்னா 172 ரக விமானம் வான்கூவர் சர்வதேச நிலைய வான்வெளிக்குள் நுழைவதாக தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, உடனடியாக காவல்துறையினரும் மற்றும் விமான சேவைப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மதியம் 1:45 மணியளவில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், விமானத்தில் இருந்த ஒரே நபரான, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தின் தகவல்படி, இந்த விமானம் விக்டோரியா ஃபிளையிங் கிளப் மூலம் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


