“தேசத்தைக் கட்டியெழுப்புதல்” திட்டங்களுக்காக, பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான C-5மசோதா, செனட்டில் எந்தத் திருத்தமும் இன்றி நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை கனடா எதிர்கொண்டு வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், விரைவான திட்டங்களைச் செயல்படுத்த கனேடிய மத்திய அரசுக்கு இந்த புதிய சட்டம் அசாதாரண அதிகாரங்களை வழங்குகிறது.
இருப்பினும், இந்த சட்ட முன்மொழிவுக்கு சில பழங்குடியின தலைவர்கள் மற்றும் செனட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அவர்களுடனான ஆலோசனை செயல்முறையை மோசமாகப் பாதிக்கும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உரையாற்றிய பிரதமர் கார்னி, அமெரிக்காவின் வர்த்தக ஆக்கிரமிப்பிற்கு எதிராக, கனடா பதிலடி கொடுப்பதற்கு இந்த சட்டம் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகப் போர் ஏற்கனவே கனடாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, வேலை இழப்புகளை ஏற்படுத்தி, ஏற்றுமதிகளைக் குறைத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டம் எத்தகைய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், பிரதமர் கார்னி, கிழக்கு மற்றும் மேற்கில் புதிய எரிசக்தி “வழித்தடங்கள்”, புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட துறைமுக வசதிகள், சுரங்கங்கள் மற்றும் பிற வளங்கள் தொடர்பான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கு இது பயன்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா கனேடிய நாடாளுமன்றத்தில் மிக விரைவாக, வெறும் மூன்று வாரங்களில் நிறைவேற்றப்பட்டமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இது, அரசு வழமையாகச் செயல்படும் விதத்தை மாற்றி, விரைவாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற கார்னியின் முயற்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இந்த மசோதா லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட செனட்டர்கள் மத்தியிலும் ஆதரவைப் பெற்றது.
இந்த மசோதா, கனேடிய மத்திய அரசின் உள்நாட்டு வர்த்தகத் தடைகளையும் நீக்குகிறது.
இதன்படி ஒரு வர்த்தகப் பொருள் அல்லது வர்த்தக சேவை, மாகாண அல்லது பிராந்திய விதிகளுக்கு இணங்கினால், அது கனடாவின் மத்திய அரசாங்கத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்ததாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
