கனடாவின் எல்லைகளை மேலும் பலப்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய, விரிவான சட்டமூலம் ஒன்றை லிபரல் கட்சியின்
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வலுவான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த C-2 சட்டமூலம், செவ்வாய்க்கிழமை அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இது கனடாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் என்றும், கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால், கனடாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும் என்று
கூறப்படுகின்றது. குறிப்பாக, அதிகாரிகள் அஞ்சல்களைத் திறந்து ஆய்வு செய்யவும், பொது நலன் கருதி குடிவரவு ஆவணங்களை ரத்து செய்யவும், இடைநிறுத்தவும் அல்லது மாற்றவும் இந்தச் சட்டம் அனுமதிக்கும்.
இந்த சட்டமூலம், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல சட்டங்களில் மாற்றங்களை முன்மொழிகிறது. இதன் மூலம், பொது சுகாதாரம் அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில், குடிவரவு ஆவணங்கள் மீது அரசாங்கத்திற்கு அதிகாரம் அதிகரிக்கும்.
மேலும் இச்சட்டமூலத்தில், அகதிகள் கோரிக்கைகள் தொடர்பான விதிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன.
அதிகாரபூர்வமற்ற எல்லை நுழைவுப் புள்ளிகள் வழியாக கனடாவிற்குள் நுழையும் ஒழுங்கற்ற எல்லை தாண்டுபவர்கள், கனடாவிற்கு வந்த 14
நாட்களுக்குள் அகதிகள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த C-2 சட்டமூலமானது, கனடாவின் பாதுகாப்பு மற்றும் குடிவரவு
கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
