ஆலையடிவேம்பு பிரதேசத்தில் செயலமர்வுக்கு ஒன்றிற்கு அறிவிப்பதற்காக மாணவி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அதிபர் ஆசிரியர் மீது மாணவியின் சகோதரியன் காதலன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவத்தை கண்டித்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று திங்கட்கிழமை (26) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோவில் கல்வி வயத்தின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபர் ஆசிரியர் இருவரும் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை தம்பட்டை பிரதேசத்தில் இடம்பெறவிருந்த செயலமர்வு தொடர்பாக அறிவிப்பதற்காக மாணவி ஒருவரின் வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை (23) சென்றிருந்தனர் .
இதன்போது குறித்த மாணவியின் சகோதரியின் காதலன் மதுபோதையில் குறித்த ஆசிரியர் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு அவர்களது இரு மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்ததையடுத்து பாடுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த அதிபர் ஆசிரியர் மீது இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று திங்கட்கிழமை (26) திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தின் முன்னால் காலை 9.00 மணிக்கு ஒன்று கூடி திரண்டனர்.
ஆசிரியர் மீது அன்பு காட்டு, வஞ்சனை தவிர்த்து வழி காட்டியை மதிக்கலாம், கல்விச் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடாதீர்கள், ஆசிரியர் அதிபர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் , அழிக்காதே அழிக்காதே கல்வி சமூகத்தை அழிக்காதே, அறம்வழி நடப்போம் அதிபர் ஆசிரியர் பெருமை காப்போம், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களை ஏந்தியவாறு அங்கிருந்து திருக்கோவில் மணிக் கூட்டு கோபுரம் வரை ஊர்வலமாக சென்றனர்.
இதனை தொடர்ந்து அங்கு சுமார் அரை மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கண்டனத்தை தெரிவித்த பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.