பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் 102 கோடி டொலர் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதேவேளை பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது.
1.சர்வதேச நாணய நிதியத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி 2026ம் நிதியாண்டின் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும். 2025ம் ஆண்டு ஜூன் இறுதிக்குள் இதைச் செய்திருக்க வேண்டும்.
2. வரி செலுத்துவோர்களை அடையாளம் காணுவது, பதிவு செய்வது, அவர்களிடம் உரிய வரி வசூலிப்பது, விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள தனித்தனியாக 4 குழுக்களை ஜூன் மாதத்திற்குள் அமைக்க வேண்டும்.
3. சர்வதேச நாணய நிதியம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஒரு நிர்வாக செயல் திட்டத்தை வெளியிட வேண்டும்.
4. 2027ம் ஆண்டிற்கு பிறகு நிதியை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து அறிக்கையை பாக்., அரசு உருவாக்க வேண்டும்.
5.மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவையாவது வசூலிக்கும் வகையில் இந்த ஆண்டு ஜூலைக்குள் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
6. ஆண்டுக்கு இரண்டு முறையாவது எரிவாயு விலையை உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள், தயாரிக்க ஆகும் செலவிற்கு இணையாக விலையை உயர்த்த வேண்டும்.
7. தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின் கட்டமைப்புக்கு மாற்றுவதை கொண்டு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.
8.17.6 டிரில்லியன் புதிய வரவு செலவுத்திட்டத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும்.
9. மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.3.21, உச்சவரம்பை ஜூன் மாதத்திற்குள் நீக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.
10. மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.
11.2035ம் ஆண்டுக்குள் தொழில்துறை பூங்காக்கள் மண்டலங்களுக்கான அனைத்து நிதிச் சலுகைகளையும் நீக்குவதற்கு, நடப்பு 2025ம் ஆண்டு இறுதிக்குள் பாகிஸ்தான் ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படாது என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்போது பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுடன் சேர்த்து,மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளன.
எனினும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.