முல்லைத்தீவு-பரந்தன் சாலையில் நந்திக்கடல் அருகே கட்டப்படவுள்ள புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2025 பாதீட்டு திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த புதிய பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வட்டுவாகலில் பாலம் கட்டுவதற்காக முன்மொழியப்பட்ட இடத்திற்கு அமைச்சர் ரத்நாயக்க நேற்று விஜயம் செய்தார்.
திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்தவுடன் கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாலம் கட்டுவதற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,900 மில்லியன் ஆகும், இதில் ரூ. 1,000 மில்லியன் வரை 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில்
ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆய்வுப் பயணத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாலை மேம்பாட்டு
ஆணைய அதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத் தக்கது.