காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குழுமியிருந்தனர்
அப்போது ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கர்நாடகாவின் ஷிவமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் – பல்லவி தம்பதியினர் மகனுடன் ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
பஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத்தை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பல்லவி கூறியதாவது:
நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே அவரை கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது.
நான்கு பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடம் போய்ச் சொல் என்று ஒரு தீவிரவாதி தெரிவித்தார்” என்றார்.