கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09) இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி கல்கிஸ்ஸை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்களுக்காக பேலியகொட மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.