கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பக்டீரியா தொற்று காரணம் என ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த வாத்துக்களை பரிசோதனை செய்ததில் பக்டீரியா தொற்று கண்டறியப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்தியர் முஹமட் இஜாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் வாத்துகள் இறப்பது தொடர்பாக கொழும்பு மாநகர சபை தலையிட்டு ஹோமாகம விலங்குகள் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து இறந்த வாத்துகளின் உடல் திசுக்களில் பல பரிசோதனைகளை மேற்கொண்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உயிரிழந்த வாத்துகள் ‘பாஸ்டுரெல்லா மல்டோசிடா’ என்ற பக்டீரியா தொற்று காரணமாக அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளோம். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எஞ்சியுள்ள பறவைகள், மிருகங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் இன்று புதன்கிழமை (05) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.