முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை மாங்குளம் மதகு வைத்த குளம் பகுதியை சேர்ந்த பெண் ஆடுகளை வளர்த்து வருகின்றார். அவரது ஆடொன்றினை அயல் வீட்டாரின் வளர்ப்பு நாய் கடித்ததில், ஆடு காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் இரு தரப்பும் இணக்கசபையிடம் சென்றுள்ள நிலையில் நாய் வளர்த்த குடும்பத்தினர் வறுமை நிலையில் உள்ளதால் , உயிரிழந்த ஆட்டுக்கு நஷ்டஈடு கொடுக்க முடியவில்லை என கூறியுள்ளனர்.
ஆடு வளர்த்த பெண் , நஷ்டஈடு தர முடியவில்லை எனில் , அவர்களின் நாயை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர்.
அதற்கு நாய் வளர்த்த குடும்பத்தினர், நாயை அவர்களுக்கு கொடுக்க சம்மதித்தனர். அதனை அடுத்து இரு தரப்பினரின் பிரச்சனை இணக்க சபையில் தீர்த்துக்கொண்டதாக கூறி சென்றனர்.
இதன் பிறகு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக கூறிய பிறகு ஆட்டின் உரிமையாளரிடமிருந்து கடிதம் பெற்றுக்கொண்ட பிறகு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நாய் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர் நாயை அவர் மரத்தில் கட்டி கொன்றுள்ளார். நாய் இறந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. நாயை வாங்கி சென்று தூக்கிட்டு படுகொலை செய்த சம்பவத்திற்கு, குறித்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வரும் நிலையில் , நாயை தூக்கிட்டு படுபயங்கரமாக படுகொலை செய்த பெண்ணிற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
அதேவேளை, ஆட்டுக்கு பதிலாக நாயை வழங்கி வைத்த சம்பவம் தொடர்பில் இணக்க சபையினர் மீதும் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நாயை கொலை செய்த பெண் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.