32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மறைந்திருந்த தம்பதியினர் வவுனியா தனிப்படை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று (22.01) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு தம்பதியினருக்கு எதிராக முறைப்பாடுகள் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிசாருக்கு செய்யப்பட்டிருந்தது.
விசாரணையின் போது 28க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் 30 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்ததாக செய்யப்பட்ட வழக்குக்கு அமைய ஏறாவூர் நீதிமன்றத்தால் குறித்த கணவனுக்கு எதிராக 16 பிடியாணைகளும், மனைவிக்கு எதிராக 16 பிடியாணைகளும் ஆக 32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த தம்பதியினர் மட்டக்களப்பில் இருந்து வெளியேறி வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் சோமரட்ண விஜெயமுனி அவர்களின் வழிகாட்டலில் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையில் சிறப்பு தனிப்படை பொலிசார் தோணிக்கல் பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டு குறித்த தம்பதியினரை செவ்வாய் கிழமை (21.01) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 55 வயதும் அவரது மனைவி 48 வயதும் உடையவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.