யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர்.
காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ததுடன் , அவர்களின் படகொன்றினையும், படகினுள் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகையும், கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.