கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியில் பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது 2020ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இடை நடுவே கைவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் வரை சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி ஒப்பந்த காரர்களின் பொறுப்பில் இருந்த பாலத்திற்கான பாதுகாப்பு சமிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அனைத்தும் கடந்த மாதத்தில் இருந்து முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர் எந்தவித பாதுகாப்பும் இன்றி பாலம் உள்ளது. அத்துடன், எந்தவித சமிக்கைகளோ மின்விளக்குகளோ பொருத்தப்படாத காரணத்தினால் கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 3 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன், கடந்த 31 ஆம் திகதி திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இவ்வீதி ஊடாக பயணிக்கும் பொழுது குறித்த பாலத்தில் உட்பகுதியில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து இன்று வட மாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டதுடன், எதிர்வரும் மார்ச் மாதமளவில் இப்பாலத்துக்கான புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்காலிக பாதுகாப்புக்காக வீதி விளக்குகள் மற்றும் வீதி சமிக்கைகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிபுரை வழங்கினார்.
இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில் புனரமைப்பு பணிகளுக்காக மக்களின் வரி பணத்திலேயே புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும் இப்படியான வீண்விரையத்தினை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் நஷ்ட ஈடு சம்பந்தப்பட்ட திணைக்கலங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.