மீன் பிடி தடைகாலம் முடிந்ததும் தமிழக பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90க்கும் அதிகமான மீன் பிடி விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.
மீனவர்கள் அனைவரும் மீன்பிடித்து விட்டு இன்று காலை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
இவ்வாறு மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களின் உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகன்னிபாறை, கட்டா, சூவாறை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சிறிய வகை சீலா 400 ரூபாய்க்கும், பெரிய அளவு சீலா 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் நகரை, பாறை மீன் உள்ளிட்டவைகளுக்கும் நல்ல விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை இறக்கி எடைபோட்டு வியாபாரிகளிடம் வழங்குவதில் மீனவர்கள் தீவிரம் காட்டினர்.
மீன் பிடி தடையால் கடந்த 60 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுக கடற்கரை இன்று மீனவர்கள் கூட்டத்துடன் களை கட்டி காணப்பட்டது.