மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், விடுமுறை கேட்டு சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரை, ஆட்சியர் தகாத வார்த்தைகளால் பேசி, செருப்பால் அடிக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழக அரசால் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், வெளியூர் அல்லது வெளி மாவட்டங்களில் வசிக்கும் உறவினர்களைச் சந்திக்கச் செல்லவும், மருத்துவ சிகிச்சைக்காக வெளியே செல்லவும், முகாம் சார் ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் விடுப்பு பெற வேண்டிய நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஜெகன் என்ற இலங்கைத் தமிழர், சென்னையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சார் ஆட்சியர் கலைமன்னனிடம் விடுப்பு கேட்டு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், விடுப்பு வழங்குவதற்கு சார் ஆட்சியர் லஞ்சமாக பணம் கேட்டதாக ஜெகன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பணம் வழங்காததால் தனக்கு விடுப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தனது விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக சார் ஆட்சியரை சந்தித்து ஜெகன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், செருப்பால் அடிக்க முயன்றதாகக் கூறப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளின் தரப்பில் விளக்கம் ஏதும் வெளியாகியுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மை நிலை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

