சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்குச் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.
முன்னதாக, நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் என மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.
அதேவேளை, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே இடநெரிசலைச் சந்தித்து வரும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், மேலும் கூட்டநெரிசல் ஏற்படும் என்றும், இதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

