வவுனியா மற்றும் அனுராதபுரத்தை உள்ளடக்கிய கீழ் மல்வத்து ஓயா திட்டம் மூலம் செட்டிகுளம் பகுதியில் புதிய குடியேற்றங்களையா உருவாக்க போகின்றீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் காரசாரமாக கேள்வி எழுப்பினார்….
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதி அமைச்சரும் இணைத்தலைவருமான உபாலிசமரசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது…
குறித்த கூட்டத்தில் கீழ் மல்வத்துஓயா திட்டத்திற்காக செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 1200 ஏக்கர் காணிகள் வனவளத்திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.
அது தொடர்பாக அந்த திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். இந்த திட்டதின் கீழ் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் அண்ணளவாக 500ஏக்கர் அளவிலான நிலம் நீருக்குள் செல்லவுள்ளதாகவும் அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக்காணியும் நட்ட ஈடும் வழங்கப்படும் என கூறியிருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இந்த திட்டத்தில் 500 ஏக்கல் நிலம் நீருக்குள் செல்லவுள்ள நிலையில் எதற்காக 1200 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியதுடன் அப்படியானால் அந்த பகுதியில் அனுராதபுரம் பகுதிகளை சேர்ந்த மக்களை கொண்டுவந்து புதியகுடியேற்றமா செய்யப்போகின்றீர்கள் என கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அந்த அதிகாரி குடியேற்றம் செய்யவில்லை ஆனால் அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வயல் காணிகளை வழங்கவுள்ளதாக கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வவுனியாவில் எத்தனையோ மக்கள் காணிகள் இல்லாத நிலையில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் வசிக்காத அனுராதபுரம் பகுதியை சேர்ந்த மக்களுக்கு எந்த அடிப்படையில் இங்கு காணி வழங்குகிறீர்கள் என சுட்டிக்காட்டினார்.
புதிதாக ஏன் பிரச்சனைகளை உருவாக்குகின்றீர்கள். நான் கதைப்பது இனவாதம் அல்ல. எனது மாவட்ட மக்கள் தொடர்பாக கேள்வி கேட்கும் உரிமை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உள்ளது.
இந்த கீழ் மல்வத்து ஓயா திட்டம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு இன்றுவரை எதாவது தெரியுமா அல்லது அரச அதிபருக்காவது தெரியுமா அல்லது திட்டம் தொடர்பாக ஒரு விடயத்தையாவது இதுவரை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்களா. ஏன் ரகசியமாக அனைத்தையும் செய்கின்றீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார்.
அவரது கேள்விகளுக்கான உரிய பதிலை கூட்டத்திற்கு தலைமைதாங்கிய பிரதி அமைச்சரோ அல்லது திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரியோ வழங்காமையால் அந்த விடயம் நீண்டு சென்றது.
இந்நிலையில் திட்டம் தொடர்பான ஒரு தெளிவூட்டலை வழங்குவதற்கு தாங்கள் தாயாராக இருப்பதாக திட்டத்திற்கு பொறுப்பான அந்த அதிகாரி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது



