நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேபாள அரசின் சமீபத்திய தகவலின்படி, வெள்ளத்தில் 626 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,426 பேர் இதுவரை தொடர்பின்றி காணப்படுகின்றனர். மேலும் 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 101 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் வீதிகள், பாலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக ராசுவா பகுதியில் உள்ள நீர்மின் நிலைய சுரங்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க நேபாள இராணுவத்தினர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.
மோசமான காலநிலை மற்றும் கடுமையான மலைப்பகுதி காரணமாக மீட்புப் பணிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதனிடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிவாரண உதவிகளை நேபாளம் பெற்று வருகிறது. வெளிநாட்டு உதவியை நிராகரித்ததாக வெளியாகிய தகவல்களையும் நேபாள அரசு மறுத்துள்ளது.
இந்த பேரழிவால் ஏற்பட்ட சேதங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை தேவைப்படலாம் என நேபாள நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் நேபாளத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

