இந்தியாவில் E20 பெட்ரோல் பயன்பாட்டால் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் எஞ்சின் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் அது சார்ந்த துறைகளுக்கிடையே முக்கிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
நாட்டில் தற்போது 20% எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட E20 பெட்ரோல் மட்டுமே அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், நாட்டில் இயங்கும் சுமார் 7.5 கோடிக்கும் அதிகமான பழைய இருசக்கர வாகனங்கள் ‘கார்புரேட்டர்’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
இந்த பழைய எஞ்சின்களால் E20 பெட்ரோலில் உள்ள கூடுதல் ஆக்சிஜனைச் (Oxygen) சரிசெய்ய முடிவதில்லை என்பதால், எஞ்சின் விரைவாகச் சூடாவதோடு, பழைய ரப்பர் பாகங்களும் சேதமடைவதாக வாகன உரிமையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், பழைய வாகனங்களின் எஞ்சின் ஆயுளைப் பாதுகாக்கவும் நுகர்வோரின் கவலைகளைப் போக்கவும் E10 பெட்ரோலையும் ஒரு தேர்வாக பங்குகளில் மீண்டும் வழங்கப் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், அதிகப்படியான எத்தனால் (Ethanol) உற்பத்தி உணவுப் பயிர்கள் மற்றும் குடிநீர் வளங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பழைய வாகன உரிமையாளர்களின் நலன் மற்றும் உணவுப் பொருட்களின் சந்தை சமநிலையைக் காக்கும் வகையில், மீண்டும் E10 பெட்ரோலை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.

