கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிகாரிகள் நிரந்தரமாக இரத்து செய்துள்ளதாக கிராண்ட் முப்தி காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கிராண்ட் முப்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்கான காரணம்
கேரளா – பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது தாதியான நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவுக்கு குடிப்பெயர்ந்தார்.
அதன்பின்னர், அந்த நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து சிறிய மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, நடத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால், நிமிஷாவின் நகைகள், மருத்துவமனையின் உரிமம், கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பறித்து, மஹதி அவரைக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது கடவுச்சீட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார்.
மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு கடந்த மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.
நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தும் நோக்கத்தில், அவரின் குடும்பத்தின் கோரிக்கைக்கு இணங்க, மத்திய அரசு தரப்பிலும் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டன. எனினும், சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
மேலும், ஏமன் சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
