மொண்ட்ரியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Montréal-Trudeau International Airport) வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக, அமெரிக்க எல்லைக் கட்டுப்பாடு மற்றும் சுங்கத் துறை (USCBP) தனது நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தால் அமெரிக்கா நோக்கிய சுமார் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பல விமானங்கள் தாமதமடைந்துள்ளதால் பயணிகள் பல
அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
மொண்ட்ரியல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க சுங்கப் பிரிவில் வர்ணம் பூசும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட வார்னிஷ் (paint job varnish) மற்றும் கட்டுமானப் பொருட்களிலிருந்து எழுந்த கடுமையான துர்நாற்றமே, இந்தத் தடங்கலுக்குக் காரணம் என விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை 8:00 மணியளவில் தமது சேவைகளை நிறுத்தி வைத்தனர்.
இருப்பினும், விமான நிலையப் பகுதியில் காற்றோட்ட வசதிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முற்பகலில் சுங்கச் சோதனைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மொண்ட்ரியல் தீயணைப்புத் துறை நடத்திய ஆய்வில், இந்த நாற்றம் சுகாதார அச்சுறுத்தல் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களம் முடக்கப்பட்டதால், அமெரிக்கா செல்லவிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

