நாட்டின் முக்கிய மாகாணங்களான கியூபெக் (Quebec) மற்றும் அல்பர்ட்டா (Alberta) ஆகியன, தங்களின் பொது அரச நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கான புதிய ஐந்து ஆண்டுகால கூட்டு உடன்படிக்கை ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
கியூபெக் மாகாணத்தின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் பிரான்ஸ்-எலைன் டுரான்சோ (France-Élaine Duranceau) மற்றும் அல்பர்ட்டா மாகாணத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் நேட் க்ளூபிஷ் (Nate Glubish) ஆகியோர் இணைந்து, இந்த கூட்டு உடன்படிக்கையை வெளியிட்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் இரு மாகாணங்களுக்கும் இடையே உடனடி நிதிப் பரிமாற்றங்கள் அல்லது நிதிசார் கடப்பாடுகள் எதுவும் இல்லை. மாறாக, அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் இரு மாகாண அரசுகளும், தங்களின் அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்வதையே இந்த ஒப்பந்தம் முதன்மையாகக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் இரு மாகாணங்களுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த உடன்படிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கியூபெக் அமைச்சர் டுரான்சோ, பொது நிர்வாக அமைப்பை நவீனமயமாக்குவதில் அல்பர்ட்டா மாகாணம் காட்டி வரும் அதீத ஆர்வத்தையும், உயர்மட்டத் தலைமைகளின் அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
