புனித நோன்பு பெருநாள் தொழுகை மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று (21) நடைபெற்றது.
அதனடிப்படையில் புனித நோன்புப் பெருநாள் தொழுகையும் பிரசங்கமும் இன்று(21) காலை மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளியில் நடைபெற்றது.
மூர்வீதி ஜும்மா பள்ளி வாசலின் பிரதான மௌலவி அசீம் தலைமையில் பெருநாள் தொழுகை நடத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொண்டனர்.
பெருநாள் தொழுகையை முன்னிட்டு பள்ளி வாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
