நாட்டின் இராணுவத் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கியூபெக் (Quebec) மாகாணத்தில் அதிநவீன இராணுவ ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை நிறுவவுள்ளதாக, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நவீனப் போரியல் உத்திகளில் ட்ரோன்களின் அத்தியாவசியப் பங்கை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
இதை உணர்ந்துள்ள மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty), கியூபெக் மாகாணத்தின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி மையமாகத் திகழும் மிரபெல் (Mirabel) நகருக்கு நேரில் விஜயம் செய்தபோதே, இத்திட்டத்தை முறைப்படி அறிவித்தார். ‘ஏரோ மொன்றியல்’ (Aéro Montréal) அமைப்பின் தலைமையில் ஒன்றிணைந்துள்ள சுமார் 30 அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த ஆய்வு மையத்தை நிறுவி இயக்கவுள்ளது.
இதற்காக அந்தக் கூட்டமைப்புக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30 மில்லியன் டொலர் நிதியுதவியை மத்திய அரசு வழங்கவுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் இந்த பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையம் ஆனது, தானியங்கி மற்றும் ஆளில்லா அமைப்புகளின் மேம்பாட்டிற்காக
அர்ப்பணிக்கப்படவுள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தை கனேடிய கூட்டுப் படைகளின் கட்டளைப்பீடம் vநேரடியாக ஆதரித்து நிதியுதவி வழங்கவுள்ளது.
புதிதாக நிறுவப்படவுள்ள இந்த தேசிய ட்ரோன் தொழில்நுட்ப மையத்தில் (NEXUS) தொழில்துறை வல்லுநர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படவுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு தனது உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கும், வெளிநாட்டுத் தற்காப்பு
இறக்குமதிகளைக் குறைப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக, வட அமெரிக்க வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் ஆர்க்டிக்
எல்லைக் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ள இத்தகைய உள்நாட்டு ஆராய்ச்சி மையங்கள் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகின்றன.
