நேட்டோ அமைப்பின் இரு நாள் உச்சி மாநாட்டின் நிறைவில் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் உட்பட மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து உலகத் தலைவர்களுக்கும் ‘ரிவோல்வர்’ (Revolver) ரகத் துப்பாக்கி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த ‘ரிவோல்வர்’ (Revolver) ரகத் துப்பாக்கியில் தலைவர்களின் பெயர்கள் பிரத்தியேகமாகப் பொறிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் உண்மையான தோட்டாக்கள் அடங்கிய பெட்டியொன்றும் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனேடியப் பிரதமருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி உடனடியாக கனேடிய பொலிஸாரிடம் (RCMP) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச விவகாரங்கள் அமைச்சு (Global Affairs Canada) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கனடாவின் சட்டங்களுக்கு அமைய, அந்தத் துப்பாக்கியை இனிமேல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த முடியாதவாறு முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் (Decommissioning) பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், அதற்குரிய தோட்டாக்கள் கனடாவுக்குள் கொண்டுவரப்படாமல் துருக்கியிலேயே முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

