தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.
இந் நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
தியாகி பொன் சிவகுமாரன் உள்ளிட்ட இன விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அக வணக்கத்தினைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், சட்டத்தரணி காண்டிபன், சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபைத்தவிசாளர்கள் சார்பில் தி.பிரகாஸ், முன்னாள் போராளிகள் சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் சிவகுமாரனின், திருவுருவச்சிலைக்கு மாலர்மாலை அணிவித்து கௌரவமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உரை ஆற்றினார்.
உரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சி மன்றம் ஒன்று வழங்கக்கூடிய உயரிய கௌரவமாக தியாகி பொன் சிவகுமாரின் நினைவேந்தலை தமது சபை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். சிவகுமாரனின் தியாகம் மற்றும் போராட்ட வடிடிவங்கள், தமிழ் மாணவர்களின் எழுச்சி உள்ளிட்ட வடிவங்கள் நினைவுகூறப்பட்டதுடன், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி சிவகுமாரன் விடுதலை வேட்கை பற்றியும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவகுமாரனின் காத்திரம் பற்றியும் விபரிக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், உள்ளராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலித்தனர்.
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுதிரண்டு சிவகுமாரனின் நினைவேந்தலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
