கியூபெக் மாகாணத்தில் 2025-26 கல்வியாண்டு முதல் பள்ளி வளாகங்கள் முழுவதிலும் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டது. கியூபெக் மாகாண அரசு பள்ளிகளில் கொண்டு வந்த முழுமையான செல்போன் தடை சட்டம் அமுலுக்கு வந்து, தற்போது ஓராண்டு நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், ஆரம்பத்தில் இந்த விவகாரம் குறித்து எரிச்சலடைந்த மாணவர்கள் தற்போது அதற்குப் பழகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். வகுப்பறையில் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவது அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த செல்போன் தடையால் வீடுகளில் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளதாகப் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளிகளில் செல்போன் தடுக்கப்பட்டதால், தற்போது வீடுகளில் குழந்தைகள் அதிக நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும் (Screen Time) சூழல் உருவாகியுள்ளது என, கியூபெக்கில் உள்ள பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த செல்போன் தடையின் முடிவுகளை மறுஆய்வு செய்யவோ அல்லது எதிர்காலத்தில் விதிகளில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டு வரவோ திட்டம் உள்ளதா என்று, கியூபெக் மாகாணக் கல்வி அமைச்சகத்தின்
செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கியூபெக் மாகாணக் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ”இந்த வழிகாட்டுதலில் எந்த மாற்றமும் செய்ய அரசு விரும்பவில்லை” என்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
