வட அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பில் கனடா போதுமான பதிலை வழங்கவில்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறை உயரதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனடாவுடன் இணைந்த வட அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கைக்கான முன்னுரிமைகளை விளக்கும் ரகசிய ஆவணத்தை பென்டகன் ஒட்டாவாவுக்கு வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அதற்கு கனடா தரப்பில் “நம்பகமான” பதில் கிடைக்கவில்லை என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், எப்-35 போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான கனடாவின் தாமதமான முடிவும் அமெரிக்காவின் அதிருப்திக்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெகின்டியின் அலுவலகம் நேரடி பதில் வழங்கவில்லை.
எனினும், அவரது தொடர்பு பணிப்பாளர் அலிஸ் ஹான்சன், கண்டமட்ட பாதுகாப்பு, ஆர்க்டிக் பாதுகாப்பு மற்றும் இராணுவ தயார்நிலைக்காக கனடா வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் கனடா தேசிய பாதுகாப்புக்காக 63.4 பில்லியன் டொலர் செலவிட்டதுடன், நேட்டோ அமைப்பின் இரண்டு சதவீத பாதுகாப்புச் செலவீன் இலக்கை முதல் முறையாக பூர்த்தி செய்துள்ளது.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கனடிய ஆயுதப்படை திறன்களை மேம்படுத்த 82 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
