நெடுந்தீவில் உள்ள கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை. எனவே அங்கு புதிதாக மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஆளுநர் , அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதிநிதிகளிடம் ஆளுநர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நெடுந்தீவுக்கு வேறெந்த வகையிலும் குடிநீர் விநியோகத்தை வழங்க முடியாத நிலையில், கடல்நீரைச் சுத்திகரித்து நன்னீராக்கி வழங்கும் செயற்பாடே ஒரே தீர்வாக உள்ளது.
அத்துடன் அங்கு ஏற்கனவே இயங்கி வரும் கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு (Reverse Osmosis Plant) நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை.
அங்கு புதிதாக மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும். இவ்வாறான புதிய திட்டங்களுக்கு, தற்போதைய செயற்றிட்டங்களில் எஞ்சியுள்ள சேமிப்பு நிதியினைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியினர் பரிசீலிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
அதற்கு, தற்போதைய குடாநாட்டு குடிநீர் விநியோகத் திட்டத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கான செலவீனம் மிக அதிகம் எனவே, யாழ்ப்பாணத்தில் மழைநீர் நேரடியாகக் கடலுக்குச் சென்று கலப்பதைத் தடுத்து, அதனைச் சேமித்துப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மாற்று நடவடிக்கைகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாநகருக்கான கழிவுநீர் முகாமைத்துவ வலையமைப்புத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவவுள்ளமை தொடர்பிலும் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இந்த பாரிய திட்டத்துக்கான கேள்விகோரல் நடவடிக்கைகள் இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
