மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் நேற்று புதன் (13) மற்றும் இன்று வியாழன் (14) ஆகிய இரு தினங்கள் மாலை மன்னாரில் உள்ள சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் இடம்பெற்றது.
காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக ஆலோசகர் ஓய்வு பெற்ற உதவி காணி ஆணையாளர் க. குருநாதன் இலவச ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் போது காணி கொள்வனவு, காணி விற்பனை, தனியார் காணி ஆவணங்கள், அரசு காணி ஆவணங்கள், லீஸ் காணி தொடர்பான விடயங்கள் புதிய காணிக்கான விண்ணப்ப நடை முறைகள், காணி விற்பனையின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள், காணி தொடர்பான ஏனைய சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் போது குறித்த இரு தினங்களும் காணி விடயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர்.
இதன் போது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் முசலிப் பிரதேசத்தில் காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு இன்று (14) நடைபெற்றது.
இந் நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக முக்கியத்துவம் பெற்று வரும் காணி தொடர்பான சட்டங்கள் ,விதிமுறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகள் குறித்து சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் செயற்பட்டு வரும் சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அமைப்புகள், கிராம மட்ட பிரதிநிதிகள், காணி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், காணி உரிமைக்காக விண்ணப்பித்தவர்கள் பலவந்தமாக காணிகளை இழந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இச் செயலமர்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
