அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் போது, ஈரானின் பிரதான அணுசக்தி நிலையமான நடன்ஸ் Natanz தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிற்கான ஈரானிய தூதுவர் ரெசா நஜாபி, திங்களன்று நடைபெற்ற 35 நாடுகளின் ஆளுநர்கள் குழு கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது ஈரானின் அமைதியான மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்ட அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.”
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இராணுவ நடவடிக்கையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் சூழல் மிகவும் கவலைக்குரியது என்றும், அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவர் ரஃபேல் குரோசி (Rafael Grossi) எச்சரித்துள்ளார்.
ஈரான் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் அணு மின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி உலைகள் மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் அணுசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இந்த தாக்கதல்களால் கதிர்வீச்சு கசிவு ஏற்படக்கூடும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும், அவ்வாறு நிகழ்ந்தால் ஒரு பெரிய மாநகரத்தின் பரப்பளவு அல்லது அதற்கும் அதிகமான பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அண்டை நாடுகளில் இதுவரை கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை என்றாலும், பிராந்திய பாதுகாப்பு கண்காணிப்பு வலையமைப்பு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அணுசக்தி நிலையங்கள் மீது ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், இது அண்டை நாடுகளின் எல்லைகளையும் தாண்டி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார்.
