கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கும் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.
பரீட்சாத்திகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை கொண்டு வர வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஏதேனும் அனர்த்த நிலைமை காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் 117 என்ற இலக்கத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய பரீட்சை அவசர நடவடிக்கைப் பிரிவின் விசேட அழைப்பு இலக்கங்களான 0113 668 026, 0113 668 032, 0113 668 087, மற்றும் 0113 668 119 ஆகிய இலக்கங்களைத் தொடர்பு கொண்டும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
