கொழும்பின் இருவேறு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த இரு ஆண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதன்படி தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவர்தன வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகடை சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான சடலமொன்று நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் எனவும் கருப்பு காற்சட்டை மற்றும் மேல் உடலில் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
