தங்காலை,நெடோல்பிட்டியவில் காணியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த சோதனை அறிக்கையை அடுத்த வாரம் பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் தொடர்பான சோதனைப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக்குழுவினரால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மித்தெனிய பகுதியில் காணியொன்றிலிருந்து ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, தங்காலை நெடோல்பிட்டிய பகுதியிலும், கந்தானை பகுதியிலும் இதேபோன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பொருட்களின் மாதிரிகள் சோதனைக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திடமும் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி, மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் இருப்பதைத் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களமும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் மெத்தம்பேட்டமைன் இரசாயனங்கள் இருப்பதாகத் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்காலை நெடோல்பிட்டிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சோதனை அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சபை தெரிவித்துள்ளது.
கந்தானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சோதனை அறிக்கையை விரைவில் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
