யுக்ரைன் தலைநகர் கீவ் மீது குறிவைத்து, ரஷ்யா இரவு நேரத்தில் நடத்திய புதிய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களில் ஒரு வயதான குழந்தையும், பெண் ஒருவரும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து உடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் சொந்த ஊரான, கிரிவி ரிஹ் மீதும் ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் போது பாரிய 3 உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் வான் தாக்குதல் எச்சரிக்கைகள் இரவு முழுவதும் செயல்படுத்தப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
யுக்ரைனுக்கு எந்தவகையிலும் உதவ வேண்டாம் என மேற்கு நாடுகளுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கையினை கடுமையாக்கி வரும் நிலையில் புதிய தாக்குதல்கள் இடம்பெற்றன.
ஒரே இரவில் பல மாடிக் குடியிருப்பு கட்டடங்கள் பகுதியளவில் அழிக்கப்பட்டதுடன், தாக்குதல்களுக்குப் பின்னர் தீப்பிடித்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கடந்த பெப்ரவரி 2022 இல் யுக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னர், தற்போது யுக்ரைனிய பிரதேசத்தின் சுமார் 20 சதவீத நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இது தவிர, கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவினால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட தெற்கு கிரிமியா தீபகற்பமும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
