வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் .
நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து காலை புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் நண்பகல் வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மிகநீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பாலப்புணரமைப்பு பணிகளை ஆரம்பிக்க வந்த ஜனாதிபதி அவர்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்றிருந்தார்.
தொடர்ந்து பாலப்புணரமைப்பு பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திர சேகரம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திலகநாதன், ஜெகதீஸ்வரன்,ரவிகரன் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
