இலங்கையில் பிரபு வர்க்கத்தினருக்கு சட்டம் சுதந்திரமாக செயல்படாத சூழல் நீண்டகாலமாக இருந்து வந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றுவதற்குக் காரணம் அதுவே என்றும் விவசாய,காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளத்துறை அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த எழுதிய நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து கண்டி கரலிய அரங்கில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்:
அங்கு, மேலும் அமைச்சர் கூறுகையில் :
“முன்னர் நம் நாட்டில் எந்த முன்னாள் ஜனாதிபதியையோ, உயர் அதிகாரியையோ சட்டத்தின் முன் நிறுத்தியதில்லை. அதனால் ரணில் கைது விசேட முக்கியத்துவம் பெறுகிறது. இனி அதிகமானவர்களுக்கு சட்டம் செயல்படுத்தப்படும் போது, இது அதிசயம் அல்ல, வழமையான ஒன்று என்று மக்கள் உணர்வார்கள்.”
பொதுசொத்துகளை தவறாக பயன்படுத்தும் எவருக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை செயல்படுத்துவது அரசு அல்ல; அரசு சட்டங்களை உருவாக்குகிறது. அவற்றை செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட அமைப்புகளும் அதிகாரிகளுமே. முன்னர் சாதாரண மக்களுக்கு மட்டுமே சட்டம் நடைமுறைக்கு வந்தது; பிரபுவர்க்கத்தினருக்கு பெரியோர்களுக்கு வரவில்லை. இப்போது அனைவருக்கும் சமமாக அமல்படுகிறது.
ரணில் தொடர்பான வழக்கு 26ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும். அப்போது அவருக்கு பிணை வழங்கி வழக்கு தொடருமா அல்லது பொதுசொத்து சட்டத்தின் கீழ் பிணை மறுக்கப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும்.
நீதிமன்ற தீர்ப்பு முன்கூட்டியே எழுதப்பட்டதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இது நீதிமன்ற அவமதிப்பாகும்; சட்டம் அதற்கும் நடவடிக்கை எடுக்கலாம் . சட்டத்தின் ஆட்சியில் நடைபெறும் நடவடிக்கைகளில் அரசியல் விருப்பங்களுக்கு இடமில்லை.பொறுப்புள்ள குடிமக்களாக ஒவ்வொருவரின் பேச்சுக்களும் கதைகளும் அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
