கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்தும் விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரரும், சிறப்பு விருந்தினராக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ விருந்தினர்களாக ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் ந. சஞ்சீவன், கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார, திரு. துலீப் சேமரத்தன ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வில் வடக்கு மாகண சபை செயலாளர்கள், அதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
