கடையில் இருந்து சாக்லேட் திருடியதாக சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 67 வயது நபர் இறந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் உதவியாளரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பேராதெனியவின் பஹல எரியகம பகுதியில் வசித்து வந்த 67 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான தர்மசேன குரே என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்று நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி தாக்குதல் நடந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலில் இறந்த நபர் தனது இரண்டு மகள்களும் திருமணமான பிறகு தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவவருகின்றது.
கடந்த 4 ஆம் திகதி மாலை, அவர் தனது வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள கடையைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் வந்து, முந்தைய நாள் அவர் சாக்லேட் திருடிய சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
அவர்கள் அந்த நபரை தங்கள் கடைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
