வவுனியா மாநகரசபையின் முதல்வரும் பிரதி முதல்வரும் தனக்கு அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில் செய்வதற்கு இடையூறை ஏற்படுத்துவதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் பாருக் பர்ஸ்சான் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட மாடு அறுக்கும் தொழுவம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
வவுனியா மாநகரசபையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்தமையால் எனது தொழில் மீது அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்படுகின்றது.
மாநகரசபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாட்டுத்தொழுவத்தின் குத்தகைதாரர் என்ற அடிப்படையில் வருடாவருடம் சபைக்கு செலுத்தவேண்டிய தொகையை உரியவாறு செலுத்தியே வருகின்றேன்.
இந்த நிலையில் சபைஆரம்பித்து சில நாட்களிலேயே மாநகரசபை உத்தியோகத்தர்களின் பங்களிப்பு இல்லாமல் சபையின் பிரதிமுதல்வர் தனிப்பட்ட ரீதியில் மாட்டுத்தொழுவத்திற்கு சென்று எனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை புகைப்படம் எடுத்தார். அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமையால் தொழில் ரீதியாக பல்வேறு அசௌகரியங்கள் எனக்கு ஏற்ப்பட்டுள்ளது.
மாட்டுத்தொழுவம் தூய்மை இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த தொழுவம் முற்று முழுதாக மாநகரசபைக்கே உரியது. நாங்கள் அதனை குத்தகைக்கே எடுத்துள்ளோம் எனவே அது தொடர்பான அனைத்து விடயங்களும் மாநகரசபையே செய்துதர வேண்டும்.
தற்போது சபையின்முதல்வர் புதிய ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். இங்கிருந்து கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களுக்கு இறைச்சி கொண்டுசெல்லக்கூடாது எனவும் உயிருடன் மாடுகள் கொண்டுசெல்லக்கூடாது என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வரிடம் கேட்டபோது, நான் சொல்வது தான் சட்டம். நான் நினைத்தால் தொழுவத்தை திறக்கவும், மூடவும் முடியும் என்று பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறார்.
வெளிமாவட்டங்களுக்கு இறைச்சியை அனுப்பும் போது மாநகரசபைக்கு செலுத்தவேண்டிய தோகையை செலுத்தியே அவற்றை அனுப்புகின்றோம். பராமரிப்பு பணிகளையும் நாங்களே செய்கிறோம். எனவே எம்மீது ஏற்ப்படுத்தப்படும் இடையூறுகளை அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கவேண்டியுள்ளது.
நேற்றயதினம் இரவும் சபையின் சில உறுப்பினர்கள் தொழுவத்தை சென்று பார்வையிட்டுள்ளனர். அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உரிய அனுமதியுடன் சென்று பரிசோதியுங்கள். அத்துடன் சென்று பார்வையிடும் நீங்கள் அங்கு இருக்கும் பிழைகளை உடனடியாக செய்து தரவேண்டும். ஆனால் அப்படி செய்வதாகவும் தெரியவில்லை.
நேற்றுமாலை தொழுவத்தின் மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் இன்று காலைவரை எமக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. இப்படியிருந்தால் நாம் எப்படி தொழில் செய்வது. எனவே எமக்கு நல்ல முடிவைத்தரவேண்டும் இல்லாவிடில் ஒரேயடியாக தொழுவத்தை மூடிவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
முதல்வருக்கும், பிரதிமுதல்வருக்கும் ஒருசில உறுப்பினர்களே அனைத்தும் செய்துகொடுக்கின்றனர். எனது வட்டாரத்தில் நான் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவன் அதே வட்டாரத்தில் தோற்றவர்களும் உள்ளனர்.
என்னுடைய தொழிலை இல்லாமல் ஆக்குவது என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது. அவர்களே இதனை செய்கிறார்களே தவிர வேறு எந்த உறுப்பினர்களையும் நாம் பிழை சொல்லவில்லை.
சபைமுதல்வரின் நல்லதிட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு அளிப்போம். ஆனால் நிதானமாக செல்லுமாறு நாங்கள் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
