ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கனடா தலைமையில் அல்பர்ட்டா மாகாணத்தின் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.
இம்மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்
கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நட்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்தியப் பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் அருமையான சந்திப்பு இருந்தது. ஜி7 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ள கனட அரசுக்கு வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன.
பிரதமர் கார்னியும் நானும் இணைந்து இந்தியா – கனடாவுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்க்க நெருக்கத்துடன் பணியாற்றுவோம்.
வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி, சுத்தமான எரிசக்தி, முக்கியமான கனிமங்கள், உரங்கள் போன்றவற்றில் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
