கனடாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 1 ட்ரில்லியன் டொலர் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள கனடா முதலீட்டு உச்சிமாநாடு டொரண்டோவில் ஆரம்பமானது.
உலகின் முன்னணி நிதி அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான சூழலியல் ஆர்வலர்கள்,தொழிற்சங்கங்கள் மற்றும் பழங்குடியின அமைப்பினர் பேரணிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரி அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுதேசிய உற்பத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்காகவே சர்வதேச மூலதனத்தை கார்னி ஈர்க்க முயன்று
வருகிறார்.
உச்சிமாநாடு நடைபெற்று வரும் கலைக்கூடத்திற்கு (Art Gallery of Ontario) வெளியிலும் டொரண்டோ நகர மண்டபத்திற்கு முன்பாகவும் திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசின் இந்த நடவடிக்கை கனடாவின் பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் தாரைவார்க்கும் முயற்சி எனப்
பலத்த கோஷங்களை எழுப்பினர்.
சுமார் 100 க்கும் மேற்பட்ட உலகளாவிய நிதி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ள இக்கூட்டத்தில், நாட்டின் அத்தியாவசிய பொதுச் சேவைகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படும் அபாயம் உள்ளதாகக் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் சிவில் சமூக அமைப்புகள் குற்றம்
சுமத்தியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிடுகையில், தங்களது பாரம்பரிய நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமைகளைப் புறக்கணித்துவிட்டு, 167 க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுமதியளிக்க முயல்கிறது எனக் கவலை தெரிவித்தனர்.
அத்துடன், வீடற்றோர் பிரச்சினை மற்றும் பொதுத்துறை கட்டமைப்பு பலவீனமடைந்து வரும் வேளையில், பெருநிறுவனங்களுக்கு வரிவிலக்குகளையும் சலுகைகளையும் வழங்குவது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி ,உலகளாவிய வர்த்தகப் போர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கனடா தனது சொந்தக் காலில் நிற்க வேண்டுமாயின், உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் பிரம்மாண்ட முதலீடுகள் அவசியமாகும். நாட்டின் இறையாண்மையைப்
பாதுகாத்துக் கொண்டே இந்த முதலீடுகள் ஈர்க்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இம்மாநாடு நடைபெறும் பகுதிகளைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், டொரண்டோ நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

