நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்று (15) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளதுடன், இந்த அறிவிப்பு நாளை செப்டம்பர் 16ஆம் திகதி காலை 10 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் மண்சரிவு முன்னெச்சரிக்கை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புளத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும் இந்த எச்சரிக்கை அமுலில் உள்ளது.
அதேவேளை, கேகாலை மாவட்டத்தில் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளிலும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண் வெடிப்புகள், நிலத்தில் திடீர் பிளவுகள், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானமாக இருக்குமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொதுமக்கள் தொடர்ந்து வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளை அவதானித்து, அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர எச்சரிக்கை பதிவில் இன்று காலை 10 மணிக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

